Saturday, July 9, 2016

பரிசு


ஆஹாஷினி ! அடுத்தமாதம் ஜந்து வயதை எட்டிப்பிடிக்கப்போகின்றாள்.
அதென்ன ஆஹாஷினி என்ற பெயர்? ஹிந்திப்பிள்ளையா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சுத்த தமிழ்ப்பொண்ணுதான் ஆஹாஷினி.
அம்மா பெயர் கனகசுந்தரவள்ளி ,அப்பா பெயர் கனகசுந்தரம்.
இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு இப்படிப்பெயர் வைப்பதுதானே பெஷன். பெயரில் ஒரு வட எழுத்தாவது இருப்பது இப்போது கட்டாயமாகிப்போனது. ஆஹாஷினியில் இரண்டு வட எழுத்துக்கள் இருப்பதாக அந்தப்பெயரைவைத்த கனகம் எனப்படும் கனகசுந்தரவள்ளி அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளுவாள்.
கனகத்தின் அம்மா ,அதுதான் ஆஹாஷினியின் பாட்டியின் நிலைதான் பாவம்.
தன் பேத்தியின் பெயரைச்சொல்லும்போது மிச்சமிருக்கும் இர்ண்டு மூன்று பல்லும்கூட உடைந்துவிழுந்துவிடும் போல இருக்கும் அவளுக்கு.
`பிள்ளைக்குப்பெயர் வைக்கச் சொன்னால் ஏன் தான் சைனாவில இருக்கிற ஊருக்கு பெயர் வைக்கிறமாதிரி வைக்கிறார்களோ ?` என்று அடிக்கடி கடிந்துகொள்வாள். அவள் எப்போதும் பேத்தியை ஆகாசினி என்றுதான் அழைப்பாள்.அதைத்தாண்டி அவளால் உச்சரிக்கவும்முடியாது.
ஆஹாஷினியின் ஜந்தாவது பிறந்தநாளைப் பெரிதாகக் கொண்டாடவேண்டும் என்பதே கனகத்தின் இப்போதைய ஒரே கனவு. பெரிதாக என்றால் ,வெளிநாட்டில் இருக்கும் தன் சொந்தக்காரங்க கொண்டாடியதைவிட பெரிதாக கொண்டாடவேண்டும்.
லங்காசிறி வெப் சைட்டில கடாயம் பிறந்தநாள் வாழ்த்துபோட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
கணவனிடம் இதுபற்றி சொன்னாள்.
`என்னங்க பிள்ளட ஜந்தாவது பேர்த் டே வருது பெருசா கொண்டாடனும்`
அதுக்கு கணவன் ,
`பேர்த்டே தானே சும்மா ஏன் ஆடம்பரம் சின்னதா வீட்டிலேயே கேக் வெட்டுவோமே `என்றான்.
`என்ன வீட்டிலேயே? அங்க வெளிநாட்டில அந்த இந்த வேலை செய்யிறவங்களே பெரிசா கொண்டாடி பேஸ் புக்கில போடுறாங்க.
நீங்க டிக்கிரி வச்சிருக்கிற மனேஜர் , நமக்கென ஒரு கெளரவம் வேண்டாமா?` என சற்று குரலை உயர்த்தியே கேட்டாள்.
இதற்குமேல் கதைக்க அவனுக்குத் திராணியில்லை.
`சரி சரி ஏதொ செய்து தொலை ` என்று விட்டுவிட்டான்.
ஒரு பெயர்போன ஹொட்டலை புக் பண்ணினாள் கனகம். இருநூறு பேருக்கு டினர் வுபே ஓர்டர் பண்ணிய‌வள் , மெனுவில் பன்னீர் , மஷ்ரூம் ,கஜூ கறிகள் வரும்படி செய்திருந்தாள். அவையெல்லாம் சாப்பாட்டில் இருப்பதுதானே இப்போது விருந்து கொடுக்கும் தமிழரின் கெளரவத்தைப் பறை சாற்றும்.
ஒரு மேக்கப்காரியையும் புக் பண்ணி இருந்தாள்.
முக்கியமா மேக்கப் ஆஹாஷினிக்கு அல்ல கனகத்துக்குத்தான்.
ஹொட்டல் டெக்கரேசனை ஒரு இவன்ட் ஓர்கனைசரிடம் கொடுத்துவிட்டாள். வீடியோ, போட்டோவை ஒரு பிரபல ஸ்டூடியோவில் ஒப்படைத்துவிட்டாள். வீடியோ பக்கேஜில் ஆப்டர் சூட், பிரி சூட் என நவீன ரக சமாச்சாரங்கள் அத்தனையும் இருந்தன.
அடுத்து ஆஹாஷினிக்கு எடுத்திருக்கும் பார்ட்டி புரோக். கலர் நல்லாத்தான் இருந்தது. ஆனால் துணிதான் பொலித்தினை பொசுக்கிவிட்ட மாதிரி சொர சொர என இருந்தது. அந்தச் சட்டை அடுக்கு அடுக்காக இருந்தது. அந்த பாரத்தை ஒரு ஜந்து வயதுக் குழந்தை எப்படித் தாங்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
தன் கெளரவத்துக்கு ஏற்றமாதிரி எல்லோரையும் அழைத்திருந்தாள்.
அழைப்பிதல் ஒன்று மட்டும் நூற்றைம்பது ரூபாய்.
...................................................................
அன்று ஆஹாஷினி பிறந்தநாள்,
காலையில இருந்தே சுறு சுறுப்பானது வீடு.
மேக்கப்காரி மத்தியானம் பன்னிரன்டு மணிக்கே வந்து கனகத்தின் முகத்தில் களி மாதிரி ஏதோ ஒன்றைப் பூசி படுக்கவைத்துவிட்டாள்.
ஆஹாஷினியைக் குளிப்பாட்டி உடை உடுத்தி மேக்கப் காரியின் டச் அப் வேலைகளுக்கு பிறகு ஹொட்டலுக்கும் போகும்வரை மடியில் வைத்திருந்தாள் வேலம்மா.
வேலம்மா கனகத்தின் வேலைக்காரி.
ஆஹாஷினிக்கு ஒரு வயதாகும் போது வேலைக்குச் சேர்ந்தவள். கனகத்தைவிட ஆஹாஷினியை அதிகம் பார்த்துக்கொண்டது
வேலம்மாதான் .அதனாலேயே வேலம்மாவுக்கு ஆஹாஷினி மீது
கொஞ்சம் அதீத பாசம்.
மேக்கப் எல்லாம் முடிந்தவுடன் , இரவு ஏழு மணி பார்ட்டிக்கு ஜந்து மணிக்கே வரும்படி வீடியோக்காரன் கேட்டிருந்ததால் ,அவசர அவசரமாக ஹொட்டலுக்குப் புறப்பாட்டார்கள்.
போகும்போது கனகம் ,
`சரி வேலம்மா, நீ வீட்டுக்குப்போயிட்டு
நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துடு, எல்லாத்தையும் கிளீன்
பண்ணவேண்டும்` என்று சொல்லிவிட்டுப்போனாள்.
ஹொட்டலில் பார்ட்டி அமோகமாக நடந்தது. இவன்ட் மனேஜர்
டி .ஜே அரேஞ் பண்ணி இருந்தான். ஒருபக்கச் சுவரில் வீடியோ போய்க்கொண்டிருந்தது. வீடியோவில் லங்கா சிறியில் வந்த
பிறந்தாள் வாழ்த்தும் போனது.
பார்ட்டி இனிதே நிறைவுபெற இரவு பத்துமணியானது.
வீட்டுக்குக் களைப்புடன் வந்த கனகம் வாசலில் வேலம்மா தன் மகளுடன் நிற்பதைப்பார்த்தாள்.
ஓ பிள்ளைக்கு பேர்த்டே என்றதால ஏதும் கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறாள் போல என நினைத்துக்கொண்டாள் கனகம்.
`வா வேலம்மா ஏன் இந்த நேரத்தில வந்திருக்கிறாய், காலையில வந்து கேட்டு இருக்கலாம்தானே` என்றாள் கனகம்.
இல்லம்மா....
என்ட மகளுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள், வீட்டில கேக் வெட்டினோம், அப்படியோ உங்களுக்கும் கொடுத்துட்டு போவம் என்று வந்தேன் அதோட‌ ஆஹாஷினிப் பாப்பாட பிறந்த நாளுக்கும் ஒன்றும் கொடுக்கலதானே அதுதான் சின்னதா ஒரு பரிசு கொடுப்பம் என்று வந்தோம்` என்று ஆஹாஷினியிடம் ஒரு சிறிய பார்சலைக் கொடுத்தாள்.
வேலம்மாவின் மகள், ஒரு சின்ன டிசு பேக்கினை கனகத்திடம் கொடுத்தாள். உள்ளே ஒரு பத்து ரூபாய்க் சொக்கலேட்டும் , கொஞ்சம் மார்ஸ் மெலோவும் டொபிகளும் இருந்தன.
வேலம்மாவின் மகளும் ஒரு புதுச்சட்டைதான் போட்டிருந்தாள்.அநேகமாக‌ பேர்மன்டிலோ அல்லது தள்ளு வண்டியில் உடுப்பு விற்பவனிடம் வாங்கியிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கொடுத்த திருப்தியில் , சரிம்மா நான் போயிட்டு நாளைக்கு சீக்கிரமே வந்துடுறன் என்று வெளிக்கிட்டாள் வேலம்மா.
வேலம்மா கொடுத்த பார்சலை ஆசையாக உடைத்துப்பார்த்த ஆஹாஷினி
`அம்மா நீ வாங்கித்தந்த சட்டை சொர சொர என கடிக்கிறமாதிரி இருக்கு,எனக்கு இந்த அச்சாச் சட்டையைப்போட்டு விடு என்றாள்`.
பார்சலை வாங்கிப்பார்த்தாள் கனகம்,உள்ளே வேலம்மாவின் மகள் போட்டிருந்ததைவிட விலைகூடின சட்டை ஒன்று இருந்தது.

No comments:

Post a Comment