Saturday, July 9, 2016

ஆட்டக்காரி


கமலா !!! முழுப்பெயர் க‌மலச்செல்வி.
ஊரில எல்லோரும் அவளை ஆட்டக்காரி என்றுதான் சொல்லுவாங்க.
ஆட்டக்காரி என்றவுடன் ஏதோ நடனதாரகை என்று எண்ணி விடாதீர்கள். எங்கள் ஊரில் ஒழுக்கம் கெட்டவள் என்பதைக் குறிக்கவே ஆட்டக்காரி என்பார்கள்.
கமலாவுக்கு அந்த பெயர் வந்த காரண‌ம் வித்தியாசமானது.
கமலாதான் அந்த ஊரில் ஆட்டோ ஓட்டிய முதல்ப் பெண். ஆட்டோக்காரி என்பதே நாளடைவில் சுருங்கி ஆட்டக்காரியாகிப்போனது. கமலத்துக்கு 35 வயசாக இருக்கும்போதே புருசன் போய்ச் சேர்ந்திட்டான்.
தனித்துவிடப்பட்ட கமலா தன்னையும் தன் மகளையும் காப்பாற்ற தெரிவு செய்ததே இந்த ஆட்டோ ஓட்டும் வேலை.
ஆரம்பத்தில வயது வித்தியாசம் இல்லாம நிறைய ஆம்பிளைங்க அவளோட சேட்டைக்குப் போவார்கள்.
தன் சீட்டுக்கு கீழே எப்போதும் இருக்கும் கத்தியை எடுத்து காட்டியே
வந்தவனையெல்லாம் சமாளிச்சு 15 வருசத்த எந்த கலங்கமும் இல்லாமல் கடத்திட்டாள்.
அவளிட்ட சேட்டைக்குப் போய் கத்தியைக் காட்டினதும் பயந்து ஓடின ஆம்பிளைங்க அவளுக்கு வச்ச பேருதான் ஆட்டக்காரி.
ஆரம்பத்தில இந்த பெயர் பற்றி கமலா பெருசா அலட்டிக்கொல்ளவில்லை. ஆனாலும் அவள் ஒரே மகள் வளர வளரத்தான் தனக்கு இருக்கும் இந்தப் பெயர் தன்ட பிள்ளையின்ட எதிர்காலத்தை பாதித்து விடுமோ என்று பயப்படத்தொடங்கினாள்.
கமலத்தின் மகள் ரஞ்சிதமலர். படு கெட்டிக்காரி.தன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்திருந்தாள் கமலம் .
சின்ன வயசில அம்மாடா ஆட்டோவிலதான் பள்ளிக்குப் போவாள். பள்ளிக்கூடத்தில எல்லோரும் பொம்பிள ட்ரைவர் என்று அவளின் அம்மாவை கேலி செய்வது பற்றி அவள் அலட்டிக்கொள்ளுவதேயில்லை.
ரஞ்சிதமலரும் அம்மாவோட சேர்ந்து ஆட்டோ ஓடப் பழகி விட்டாள். அவளுக்கு பதினொரு வயசாக இருக்கும் போதே தனியாக ஆட்டோ ஓடுவாள்.
ரஞ்சித மலருக்கு பன்னிரெண்டு வயசான போது, கமலத்துக்கு ஊரார் தன்னை ஆட்டக்காரி என்பது பிள்ளையப் பாதிக்கக்கூடாது என்று டவுனில இருக்கிற ஒரு பாடசாலையில் சேர்த்துவிட்டாள்.
ரஞ்சித மலர் ஊரில படிக்கும்போதே நல்ல மார்க்ஸ் எடுத்து தொடர்ந்து முதலாம் பிள்ளையாக வந்ததால டவுன் பள்ளியில சேர்க்கிறதில பெரிய பிரச்சினை ஒன்றும் இருக்கவில்லை.
ரஞ்சிதமலரை டவுனில் ஒரு வுமன் ஹொஸ்டலில் சேர்த்துவிட்டு ஊரிலேயே தொடர்ந்தும் ஆட்டோ ஓட்டினாள் கமலம்.
கமலத்தைப் பார்த்து இப்போது பல பெண்கள் ஆட்டோ ஓடத் தொடங்கிவிட்டிருந்தனர். ஆனாலும் இன்னும் எல்லோரும் கமலத்தை மட்டுமே ஆட்டக்காரி என்று சொல்கிறார்கள்.
காலங்கள் கடந்தோடி இருந்தன‌
அன்றொருநாள்
உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருந்தன.
அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்பெற்ற கிராமத்துப் பெண் என்று ரஞ்சிதமலரின் சிறிய பேட்டி ஒன்றை தொலைக்காட்சி செய்தியில் போட்டார்கள்.
"மேற்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள்."
"வெளிநாட்டில ஒரு பல்கழைக்கழகம் ஏரோனார்டிக் எஞ்ஞினியரிங் படிக்க ஸ்கொலர்சிப் தருவதாக அழைக்கிறார்கள். போகலாம் என நினைக்கிறேன்."
"எப்படி இதில் ஆர்வம் வந்தது."
"எங்க அம்மாதான் ஊரில ஆட்டோ ஓட்டிய பெண்.
அவர் மகள் நான் தான் முதலில் பிளேன் ஓட்டின பெண்ணாக வரவேண்டும் !!! "

No comments:

Post a Comment