Saturday, July 9, 2016

தாய்ப்பால்


நிலுக் ஷன் பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்ட இளைஞன்.இன்டர்நெஷனல் ஸ்கூலிலதான் படிச்சான். அதுக்குக் கூட எப்போதாவதுதான் போவான்.
அவனுன் அப்பாதான் சிட்டியிலேமிகப்பெரும் புள்ளி. இப்போது விவசாயத்துறை அமைச்சராக இருக்கிறார்.
நிலுகஷன் கிழமைக்கு மூன்று தடவையாவது நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிப்பான். அனேகமா பப்புக்குத்தான் போவான். ஒருதடவை அவன் நல்ல போதையில் காரோட்டி வரும்போது அக்சிடன்ட் ஆகி பிரச்சினையானது. பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு கால் போனது. ஆனாலும் ராஜபதி அந்த விடயத்தை மீடியாக்களுக்கு போகாமல் சமாளிச்சுவிட்டார்.
அதைத்தவிர நிலுக்ஷனால் வேற எந்தத் தொந்தரவும் வந்ததில்லை ராஜபதிக்கு.
தன் பையனுக்கு மற்ற பணக்காரப்பையன்களுக்கு
இருப்பது போல ட்ரக், பொண்ணுங்க சமாச்சாரம் எல்லாம் இல்லையே , சும்மா தண்ணி மட்டும்தானே, இந்தக்காலத்தில எந்த பெடியன்கள்தான் குடிக்கவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வார்.
அந்த அக்சிடன்டுக்குப் பிறகு நிலுக்ஷனுக்கு என்றே ஒரு ட்ரைவரை வைத்திருந்தார் . நிலுக்ஷனுக்கு தானே கார் ஓடுவதுதான் பிடிக்கும். ஆனாலும் அவன் தண்ணி அடிக்கும் நாட்களில் மட்டும் அவனைப் பத்திரமாக அழைத்து வருவதே அந்த ட்ரைவரின் வேலை.
....................................................................
ராஜபதி வீட்டில் இருக்கும் நிறைய வேலைக்காரர்களில் மங்கம்மாதான் சீனியர் . 20 வருசமா வேலை செய்யும் விசுவாசமானவள். நிலுஷன் பிறந்தவுடன் வேலைக்குச் சேர்ந்தவள்.
வேலைக்குச் சேரும் போது அவளூக்கும் ஒரு கைக் குழந்தைந்த இருந்தது. மங்கம்மாவின் மகன், நிலுக்ஷனை விட 4 மாசம்தான் மூத்தவன். அந்தக்காலத்தில் தன் சொந்தப் பையனையும் கூடவே அழைத்து வந்து தூங்க வைத்த பின்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பாள்.
மங்கம்மா நிலுக்ஷனை சின்ன வயசில் இருந்தே தூக்கி வளர்த்தவள். மற்ற‌ வேலைக்காரர்கலைவிட மங்கம்மாவுக்கு நிலுக்ஷன் மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் வைத்திருந்தான்.
அடிக்கடி குடித்திட்டு வரும் நிலுக்சன் தன் அறையினுள் வாந்தி எடுத்து வைப்பான் , எல்லா வேலைக்காரர்களும் மனதுக்குள் திட்டிக் கொண்டே சுத்தம் செய்வார்கள்.
மங்கம்மா மட்டும் " இந்தப் பையன் இந்த வயசிலேயே இப்படி குடிச்சு குடிச்சு சீரழியிறானே " என்று கவலைப்பட்டுக் கொண்டு சுத்தம் செய்வாள். ?
இது பற்றி நிலுகஷனிடம் ஒரு நாள் சொல்லியும் இருக்காள்.
'சின்ன ஜயா?"
"என்ன மங்கம்மா?"
"இல்ல நீங்க இந்த வயசிலயே இப்படிக் குடிச்சிட்டு வாரத பார்க்கக் கவலையா இருக்கு...."
நிலுக்ஷன் எதுவும் பேசவில்லை.
இதுபற்றி அவனைப் பெத்த அம்மாவே பேசி இருந்தால்க் கூட இன்னேரம் வீட்டில் இருந்த ஏதாவது ஒன்று உடைஞ்சிருக்கும்.
மங்கம்மா பேசியதால் , எதுவும் பேசாமல் விட்டு விட்டான்.
ஏனோ தெரியாது மங்கம்மாவை மட்டும் எதிர்த்து பேசுவதில்லை நிலுக்ஷன்.
.....................................................
ராஜபதி அமைச்சர் என்பதால் வீட்டுக்கு வருபவர்கள் , வேலைக்கு வருபவர்கள் என எல்லோரும் வாசலில் வைத்து செக் பண்ணப்பட்டுத்தான் உள்ளே போக விடப்படுவார்கள். மங்கம்மாவுக்கு மட்டும் எந்த செக்கிங்கும் இல்லாமல் வீட்டுக்க்கு வந்து போகுமளவுக்கு செல்வாக்கு இருந்தது.
ராஜபதிக்கு மங்கம்மாவின் சமையலைப் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவருக்கு மங்கம்மாதான் சமைக்க வேண்டும்.
அடிக்கடி சாப்பிடும் போது மங்கம்மாவின் சமையலை "ஆகா சூப்பர் மங்கம்மா" என்று புகழ்ந்துகொண்டே சாப்பிடுவார். குறிப்பாக ஆட்டிறைச்சுக் கறிக்கு அவள் அரைக்கும் மசாலா வாசத்தை இதுவரை அவர் எந்தப் பைவ் ஸ்டார் ஹொட்டலிலயும் உணர்ந்ததில்லை .
எந்தக் கண‌வனும் இன்னோரு பெண்ணின் சமையலைப் புகழ்ந்தால் அவர் மனைவிக்கு கோபம் வருவது நியாயமானதுதான். ஆனாலும் ராஜபதியின் மனைவி மட்டும் விதி விலக்கு. கல்யாணம் முடிச்சு 33 வருசத்தில ஒருநாள் கூட தன் கண‌வனுக்குச் சமைச்சுப் போடாத அவளுக்கு கோபம் வராமல் விடுவது ஆச்சரியமில்லைதான்.
அவள் சமைச்சு போடாததுதான் ராஜபதி இந்த வயசிலயும் இவ்வள‌வு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமோ தெரியாது?
……………………………………………………………………………………………………………………………………………..
அன்று மங்கம்மா வேலைக்கு வர பத்து மணியாகிவிட்டது.
ராஜபதியின் வாசலில் நிறையக் கூட்டமாக இருந்தது. எல்லோர் முகத்திலும் சோகம் இருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை வாசலில் வைத்தே உணர்ந்துகொன்டுவிட்டாள்.
"யாராக இருக்கும்?
ஒரு வேலை ஜயாவுக்கு ஏதும் நடந்துவிட்டதோ? "
படபடப்புடன் வீட்டுக்குள்ளே போனாள்.
ஹோலின் நடுவே ஒரு விலையுயர்ந்த பெட்டியினுள்ளே நிலுக்ஷனின் உடல் படுக்க வைக்கப்படிருந்தது. தலைமாட்டில் விளக்கு எரிந்து கொன்டிருந்தது.
விளக்குக்குப் பக்கத்தில் இருந்த நிலுக்ஷனின் அம்மாவின் கண் கலங்கியிருந்தது , ஒரு விலையுரர்ந்த கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக்கொன்டிருந்தாள்.
ராஜபதியும் நன்றாக அழுதிருக்க வேண்டும் ,கண் சிவந்து வீங்கியது போல இருந்தது. இடிந்துபோய் ஒரு ஓரமாய் இருந்தார்.
நிலுஷன் இரவு குடித்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கிறான்.
பணக்கார வீட்டு மரணம்!!!
யாருமே சத்தமிட்டு அழவில்லை. ஏழை வீடுகளில் கேட்கும் ஒப்பாரிகள் இல்லை. எல்லோரும் ஒவ்வொரு விலையுயர்ந்த கைக்குட்டையோடு மெளனமாக அழுதுகொண்டிருந்தார்கள்.
மங்கம்மா ,நிலுக்ஷனை இந்தக் கோலத்தில் கண்டவுடன் அந்த இடமே மாறிப்போனது
“ஜயோ என்ன பெத்த ராசா “என்று கத்திக்கொண்டு நிலுகஷனின் உடலை நோக்கி அவள் ஓடியது பக்கத்தில் இருந்த பத்துப் பதினைந்து வீடுகளைத் தாண்டிக் கேட்டிருக்கும்.
நிலுக்ஷனின் தலைத் தூக்கி தன் மார்போடு அணைத்தவள்
" ஜயோ ராசா இந்த வயசிலலேயே இந்தக் குருட்டுக் கடவுள் உன்னை எடுத்துட்டானே, அவனுக்கு உசுருதான் தேவை என்றால் இந்த வயசில நான் இருக்கனே என்னைய எடுத்திருக்கலாம்தானே......"
மங்கம்மாவின் ஒப்பாரியில் வீடே அதிர்ந்தது.
பிரைம் மினிஸ்டரும் , சில வெளிநாட்டுப் பிரதி நிதிகளும் வரும் நேரம், மங்கம்மாவின் ஒப்பாரி பட்டிக்காட்டுத் தனமாக இருக்குமென நினைத்த ராஜபதியின் பி ஏ மங்கம்மாவை அந்த இடத்தில் இருந்து அழைத்துப் போகுமாறு காவலாளிகளுக்கு க் கட்டளையிட்டான்.
இரண்டு காவலாளிகள் வந்து மங்கம்மாவின் கையைப் பிடித்து தூக்க முயற்சித்தார்கள்.
ம்ம்ம்....முடியவில்லை.
நிலுக்ஷனின் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தவள் விடவேயில்லை.
கொஞ்ச நேர முயற்சிக்குப் பிறகு ஒரு கவலாளி மங்கம்மாவிடம்
"இங்க பாரு கிழவி
பெத்து வளர்த்து பால் குடுத்த அம்மாவே அமைதியா அழுதுகொன்டு இருக்கா நீ ஏன் ஓவரா சீன் போடுறாய்?"
"டேய் இவனும் என்ட பிள்ளதான்டா, எத்தனை நாள் என்ட மார்பில பால் குடிச்சிருக்கான். இவன்ட‌ அம்மா புட்டிப்பாலை குடுக்கச் சொல்லிட்டுப் போயிடுவா, நான் என்ட பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது இவன் ஏக்கமா பார்ப்பான் ..
ஒரு மார்பில என்ட பிள்ளைக்கும் மற்றதில இவனுக்கும் பால் குடுத்து வளர்த்தவள்டா நான்..." ஒப்பாரி தொடர்ந்தது.
இப்போது மங்கம்மாவை அந்த இடத்தில் இருந்து அகற்றும் எண்ணம் யாருக்கும் வரவில்லை.

No comments:

Post a Comment